திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பனவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் உருவப் படத்திற்க்கு மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் மலர் மாலை அணிவித்து ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை கடற்கரையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைகளை படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களோடு ஊடகவியலாளர் சுகிர்தராஜன் செய்திகளாக வெளியிட்டிருந்தார்.
அத்துடன் மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணைகளை திசைதிருப்ப முயற்சிகள் நடந்த போது, இவர் எடுத்த நிழற்படங்களே அந்த மாணவர்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டியிருந்ததோடு அது சர்வதேச அழுத்தங்களை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தி இருந்தது.
இவ்வாறு துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய ஊடகவியலாளர் சுகிர்தராஜன் கடந்த 2006 ஜனவரி 24 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
மட்டக்களப்பு குருமண்வெளியை பிறப்பிடமாகக்கொண்ட சுகிர்தராஜன் அம்பாறை வீரமுனையில் வசித்துவந்த நிலையில் திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்த போதே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரது படுகொலை குறித்த விசாரணைகள் நடைபெற்ற போதும் அவரை கொலை செய்த குற்றவாள் இன்று வரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.