தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒன்றிணைக்கும் முயற்சிகளை நிச்சயமாக மேற்கொள்வேன். அனைவரையும் ஒன்றிணைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ரீதியில் இதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும். கட்சியின் இறுதி தீர்மானத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் ஒன்றிணைப்பேன் என்ற எனது அறிவிப்பு வெற்றி பெறும் என நம்புகின்றேன் என்றும் சுட்டிக்காட்டினார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விரைவில் பேச்சுவார்த்தை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் மனக் கீறல்கள் இருக்கலாம். அவற்றை நிவர்த்தி செய்து அனைவரையும் ஒன்றிணைத்து பலமுடன் செயற்படுவதற்கு அதிக கரிசனை கொண்டுள்ளோம்.
பிரிந்து சென்ற தலைவர்களுடன் வெகு விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.
இதேவேளை, ஒரு விடுதலைக்காக போராடுகின்ற இனம் அதிலும் போரில் தோல்வியடைந்த இமன் தன்னுடைய விடுதலை பற்றி சிந்திப்பதும், வெற்றி பெற்ற இனம் அவர்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்க முயற்சிப்பதும் வரலாற்றில் காணக்கூடிய முரண்பாடான நிலையாகும்.
ஆனால், அந்த முரண்பாடான விடயங்களை கடந்து நாங்கள் ஒரு தேசிய விடுதலையை அடைவதென்பது ஒரு நீண்ட பயணம். இதற்கான காலவரையறையை குறிப்பிட முடியாது.
இந்த நீண்ட பயணத்தில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளோம். மக்கள் தெளிவாக உள்ளார்கள். எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.