அபிவிருத்தி குழு கூட்டத்திற்குச் சென்ற பண்ணையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு சென்ற மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களை கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இன்றைய(6) தினம் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொள்ள சென்ற மயிலத்தமடு பண்ணையாளர்களை அழைப்பு கடிதம் இல்லை என கூறி ஏறாவூர் பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தடுத்ததோடு உள்ளே சென்று அமர்ந்திருந்த ஒரு பண்ணையாளரை வெளியில் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த பண்ணையாளர்கள் நீண்ட நேரம் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியே நின்றுள்ளனர்.
இது குறித்து இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் பின்னர் இறுதி நேரத்தில் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப் பெரிய பிரச்சியையாக மாறியிருக்கும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டம் 145 நாட்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு அவர்களது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேச அனுமதிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.