மலையகத்தில் தமிழர்கள் மீது இனவாதத்தை கக்கும் பொலிஸார்: ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் வடிவேல் சுரேஷ் கண்டனம்
உடனடியாக சம்பள உயர்வு வேண்டும்
நாடாளுமன்றில் வடிவேல் சுரேஷ்,
இந்திய வம்சாவளி மக்கள் கடந்த 200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்க பாடுபட்ட சமூகம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், கல்வி வசதிகள் இன்றிவாழும் மக்களாக உள்ளனர்.
இவர்களை கௌரவப்படுத்த பல சந்தர்ப்பங்கள் நாட்டை ஆண்ட தலைவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், அதனை எவரும் செய்யவில்லை.
காணி உரிமையை வழங்கும் செயல்பாடுகளை அமைச்சர் ஹரின் பெரணான்டோ முன்னெடுத்து வருகிறார். அதனை வரவேற்கிறோம்.
இந்த திட்டம் மலையகத்துக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இத்திட்டம் முழுமையடையும்.
டிசம்பர் 31ஆம் திகதி முடிந்து ஜனவரியும் முடிந்துவிட்டது. ஆனால், சம்பள உயர்வுக்கான நடவடிக்கைகள் எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை.
உடனடியாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க வேண்டும். ஜனாதிபதியும் இந்த விடயத்தில் அழுத்தம் கொடுத்து வந்தார். ஆகவே, உடனடியாக சம்பள உயர்வை வழங்க வேண்டும்.
மலையக மக்களுக்கு இந்தியா வீடுகளை வழங்கும் என பார்த்துக்கொண்டிருக்காது வீடுகளை வழங்குவதில் இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பு வேண்டும்.
பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையக மக்கள் பாடசாலைகளில் வாழ்ந்து வருகின்றனர். பாதைகள் சீரமைக்கப்படவில்லை.
மலையக பொலிஸ் நிலையங்களில் இனவாத செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. பெருந்தோட்டக் கம்பனிகள் இங்கு பொலிஸாரின் ஊடாக மக்களை கட்டுப்படுத்துகின்றன. உடனடியாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.” என்றார்.