மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினையில் சட்டத்தினை மதிக்காத,
நீதிமன்றத்தையே அவமதிக்கும் இனவாத நிலையில் உள்ளவர்களுடனேயே செயற்படவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாங்கள் உள்ளோம். நீதிமன்ற தீர்ப்பினையே நடைமுறைப்படுத்த முடியாத நிலைமையே தொடர்ந்தும் இருந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பண்ணையாளர்கள் பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு கலந்து கொண்டு பேசிய பண்ணையாளர்கள் இவ்வாறு கூறியிருந்தனர்.
‘மயிலத்தமடு பகுதியில் மீண்டும் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனால் கால்நடைகளை மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதுடன் மாடுகள் தொடர்ந்து இறக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு இங்கு மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர் சங்க உறுப்பினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் அறுவடைகள் முடிந்துள்ள நிலையில் அங்கிருந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் செல்லாத நிலையில் மீண்டும் பயிர்ச்செய்கைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதனை தடுப்பதற்கு அங்குள்ள காவல் நிலையம் ஊடாக நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
தமது கால்நடைகள் உணவின்றி தினமும் இறக்கும் நிலையிருந்துவருவதாகவும் அங்குள்ள மாடுகளை மட்டக்களப்பு ஏனைய பகுதிகளுக்குகூட கொண்டுசெல்லமுடியாத வகையில் மாடுகள் உணவின்றி பலவீனமடைந்துள்ளதாகவும் கடந்த 10மாதங்களாக எந்தவித பால் பெறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுவருவதாகவும் இதன்போது பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,
கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் நாங்கள் பிரதேச அபிவிருத்திகுழு மற்றும் மாவட்ட அபிவிருத்திகுழுவில் தீர்மானங்களை நிறைவேற்றி குறித்த அமைச்சுகளுக்கு அனுப்பியுள்ளோம். நாங்கள் தொடர்ச்சியாக பண்ணையாளர்களுக்கு சார்பான நிலைப்பாட்டிலேயே இருந்துவருகின்றோம். ஆனாலும் எங்களை சிலர் அரசியலுக்காக இதில் எதிராக காட்ட முனைகின்றனர்.
சட்டத்தினை மதிக்காத இனவாத நிலை அதிகமாகவுள்ளது.
நீதிமன்றத்தையே அவமதிக்கும் நிலையில் உள்ளவர்களுடனேயே செயற்படவேண்டிய நிர்ப்பந்த நிலையில் நாங்கள் உள்ளோம்.
எந்தவொரு நிலையிலும் நாங்கள் பண்ணையாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளில் நாங்கள் ஈடுபடவும் மாட்டோம், ஆதரிக்கவும் மாட்டோம். இந்த பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்பதில் எங்களுக்கு அதிகளவான அக்கரையுள்ளது. இதன்மூலம் அதிகமான விமர்சனங்களுக்கு நாங்கள் உள்ளாகின்றோம் என்றார்.
இதன்போது நீண்டகாலமாக இருந்துவரும் மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட அபிவித்திக்குழு கூட்டத்தில் திர்மானம் ஒன்றை எடுத்து அதன் ஊடாக அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்களை இணைத்து கலந்துரையால் முன்னெடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை காணவும் தீர்மானிக்கப்பட்டது.