இலங்கையில் நெல் கொள்வனவில் ஆரம்பிப்பதாக விவசாய அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த அமைச்சர் கடந்த இரண்டு மாதங்களாக நித்திரையில் இருந்தாரா? என மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகாரசபை உப ஜெ.நிரஞ்சன குமார் தெரிவித்தார்.
இன்று மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் விவசாய அமைச்சர் இலங்கையில் நெல் கொள்வனவில் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த அமைச்சர் கடந்த இரண்டு மாதங்களாக நித்திரையில் இருந்தாரா?
எங்களது மாவட்டத்தில் அறுவடை முடிந்து சிறு போகம் ஆரம்பித்து விதைக்கப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது.
கடந்த போகம் இரண்டு இலட்சம் ஏக்கர் நெற் பயிர்ச் செய்கை மேற்கொண்டு சுமார் ஐம்பது ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் முற்றாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் சொல்லொணா துயரத்தில் இருக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் விவசாய அமைச்சருக்கு நாங்கள் அரசாங்க அதிபர் ஊடாக 30.11.2023 அன்று ஜனாதிபதிக்கும், அமைச்சருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தோம்.
அதில் எதிர்வரும் 15.01.2024 இல் அறுவடை ஆரம்பிக்கப் போகுது குறித்த அறுவடை ஆரம்பிப்பதற்கு முன்பு நெல்லுக்கான நிர்ணய விலையை தாருங்கள் என்று. ஆனால் அதனை கணக்கில் எடுக்கவில்லை.
இது இந்த வருடம் மட்டுமல்ல கடந்த ஐந்து, பத்து வருடங்களாக தமிழ் பேசும் விவசாயிகளை திட்டமிட்டு இவ்வாறு தான் ஏமாற்றி வருகின்றனர்.
இதனால் தான் இந்த நாட்டில் கடந்த காலங்களில் இன வேற்றுமை உருவாகியாது.
காப்புறுதி செய்த விவசாயிகளுக்கு காப்புறுதி செய்ய வந்த நிறுவனங்கள் விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதனை யாரிடம் போய் கூறுவது.
பல விவசாயிகள் மனைவி பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்து பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் இனியும் விவசாயம் செய்வதா இல்லையா என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
இறக்குமதி செய்யும் வாசனை திறவியத்திற்கு நினைத்தால் வரி விதிக்கிறீர்கள், வெங்காயத்திற்கு விலையை அதிகரிக்கிறீர்கள், பருப்புக்கு விலை அதிகரிக்கிறீர்கள், ஏன் இலங்கையில் விவசாய நாட்டில் உள்ள 75 வீதமான விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லுக்கு ஒரு விலை போட முடியவில்லை.
உங்களை யார் இந்த நாட்டில் தேர்தலில் தெரிவு செய்கிறார்கள்.
பசளைக்கு விலையை கூட்டுகிறீர்கள், ஆயிரம் ரூபாய்க்கு வித்த பசளை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது, 1500 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட எண்ணெய் 15,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது,
ஆனால் நெல்லுக்கு மாத்திரம் விலை அதிகரிக்கப்படவில்லை.
எனவே இந்த நிலையில் நெல் கொள்வனவில் ஈடுபட உள்ளதாக விவசாய அமைச்சர் கூறியிருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல்.
ஏற்கனவே நெல் கொள்வனவு செய்ய அரசாங்கத்திடம் நிதி இல்லை என்று கூறிய விவசாய அமைச்சர் நாட்டில் 95 வீதமான நெல் அறுவடை நிறைவடைந்து மிக மோசமான நஷ்டத்தில் தனியாருக்கு விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து முடித்துள்ள நிலையில் தற்போது மட்டும் அரசாங்கத்திற்கு எங்கிருந்து பணம் கிடைத்துள்ளது.
அதுவும் விவசாய அமைச்சர் தங்களது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நெல் கொள்வனவில் ஈடுபடுவதாக கூறியுள்ளமை ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றும் நடவடிக்கை. ஏனெனில் தேர்தல் ஒன்றை நோக்காக கொண்டு அவருடைய சொந்த மாவட்டத்தில் விவசாய அமைச்சர் இந்த நெல் கொள்வனவை ஆரம்பிக்க உள்ளார்.