குடும்ப சுமைகளுக்கு மத்தியில் தனது தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொள்ளாது சமூகசேவையை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட்டு வருகின்ற சாதனைப் பெண்களை கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பாக கௌரவிப்பதில் மிகவும் பெருமிதமடைகின்றோம். என உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்கள் தெரிவித்தார்;
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர்களது உரையின்போது ‘பல்கலைக்கழகமானது ஒரு சமூக நிறுவனமாக இருப்பதனால், சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் பங்களிப்புச் செய்வது முக்கியமானதாகும்.
தற்போது மட்டக்களப்பு மாவட்டமானது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. பிரதானமாக பொருளாதார நெருக்கடியின் மத்தியில் பெண்கள் தமது சுயமுயற்சியில் சமூகத்திற்கு பாரிய பங்களிப்பு செய்வது பாரட்டபட வேண்டிய விடயமாகும். அந்த வகையில் தமது குடும்ப சுமைகளுக்கு மத்தியில் தனது தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொள்ளாது சமூகசேவையை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட்டு வருகின்ற சாதனைப் பெண்களை கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பாக கௌரவிப்பதில் மிகவும் பெருமிதமடைகின்றோம். எதிர்வரும் காலங்களில் பல்வேறுபட்ட நிறுவனங்களுடன் இணைந்து சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழும் பெண்களை இணங்கண்டு அவர்களை கௌரவிப்பதுடன், அவர்களுக்குரிய அங்கீகாரத்தையும் வழங்க திட்டமிட்டுள்ளோம்’ என குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பாலின சமநிலை மற்றும் சமத்துவப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஹேமமாலி குணதிலக்க நிகழ்நிலையூடாக கலந்துகொண்டு முக்கிய உரையாற்றினார். அவர் தனதுரையில் ‘உலகிலும் இலங்கையிலும் பெண்களுக்கான சமநிலை மற்றும் சமத்துவம் அனைவராலும் கொடுக்கப்படுகின்றதுடன் சமூகத்தின் பார்வை மாற்றப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.
மாவட்ட அரசாங்க அதிபரின் உரையில், ‘மகளிர் தினமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மார்ச் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கிழக்கு பல்கலைக்கழகமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பெண் முயற்சியாளர்களையும் சமூகசேவையாளர்களையும் கௌரவிப்பது முதற் தடவையாகும்’ என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பெண் சமூக சேவையாளர்கள் தாம் கடந்து வந்த பாதைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமை அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘பெண்களின் வளர்ச்சியினையும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியினையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அதனை உள்வாங்கும் உயரிய எண்ணக்கருவை சமூகத்தில் ஊட்டுவோம்’ என்ற இவ்வாண்டின் சர்வதேச மகளிர் தின கருப்பொருக்கு செயல்வடிவம் கொடுக்கும் பொருட்டு கிழக்குப் பல்கலைக்கழக பாலின சமநிலை மற்றும் சமத்துவப் பிரிவினரால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘சர்வதேச மகளிர் தினம் 2024’ விழா வியாழன் (13) கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 செயலகப் பிரிவுகளில் தொழில் முயற்சிற்கும் சமூக சேவைக்கும் கூடிய பங்களிப்பு செய்த 14 பெண் தொழில் முயற்சியாளர்களும், 14 பெண் சமூகசேவையாளர்களும் வரவேற்று கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.முரளிதரன் சிறப்பு விருந்தினராகவும், கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் கலாநிதி த.பிரபாகரன் கௌரவ விருத்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். இப்பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், கல்விசார் ஊழியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசார ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்ற இவ்விழாவில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.