50 ஆண்டுகளுக்கு சார்ஜ் செய்யாமல் பயன்படுத்தக் கூடிய வகையில் அடுத்த தலைமுறைக்கான பேட்டரியை கண்டுபிடித்து இருப்பதாக சீனாவை சேர்ந்த பீட்டாவோல்ட் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
எப்போதும் செல்போனும் கையுமாக இருப்பவர்கள் சார்ஜ் நிற்கவே மாட்டைக்கிறதே என ஃபீல் பண்ணுவதை பார்க்க முடியும். சார்ஜ் போடும் நேரம் தவிர இதர நேரம் முழுவதும் செல்போனில் எதையாவது பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டு இருக்கும் இன்றைய 2 கே கிட்ஸ்கள் பலரும்… தினமும் சார்ஜ் போடும் பேட்டரியை யாரப்பா கண்டுபிடித்தது என்று அங்கலாய்ப்பார்கள்.
சார்ஜ் இறங்காத மாதிரி எதாவது பேட்டரி வருமா என்று செல்போன் சர்வீஸ் கொடுக்கும் போது கூட ஜாலியாக கேட்டு கலாய்ப்பார்கள். சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இப்போது சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 50 ஆண்டுகள் சார்ஜ் செய்யாமல் பயன்படுத்தக்கூடிய பேட்டரியை கண்டுபிடித்து இருப்பதாக கூறி அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பீட்டா வோல்ட் நிறுவனம்: சீனாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘பீட்டா வோல்ட்’ (Beta volt) தான் டெக்னாலஜி துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் விதமாக புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அணுசக்தியை பயன்படுத்தி இந்த பேட்டரி தயாரித்துக் கொள்ளும் என்றும் சார்ஜ் போடவோ அவற்றை பரமாரிக்க வேண்டிய அவசியமோ இல்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அணுசக்தி என்ற வார்த்தை கேட்டதும் அளவில் பெரியதாக ஏதோ சூட்கேஸ் மாதிரி தூக்கிட்டு போகனுமோ என நினைத்து விட வேண்டாம். இது அளவிலும் மிகச்சிறியது என்று கூறியிருக்கிறது பீட்டா வோல்ட் நிறுவனம். 63 அணுசக்தி ஐசோடோப்புகள் அழுத்தம் மூலமாக பயன்படுத்தி ஒரு நாணயத்தை விட சிறிய தொகுதியாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்றும் அணுசக்தியை ஆற்றல் சக்தியாக இந்த பேட்டரி வழங்கும் எனவும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
1 வாட் ஆற்றலை வழங்கும்: பீட்டா வோல்ட் தயாரிக்கும் பேட்டரி 15x15x5 கன மில்லிமீட்டர் அளவில் இருக்குமாம். இதனால் 100 மைக்ரோ வாட் மற்றும் 3 வோல்ட் பவரை தயாரிக்க முடியும் எனவும் குறை கடத்திகளை கொண்ட மெல்லிய அடுக்குகளை இந்த பேட்டரி கொண்டு இருக்கும் எனவும் பீட்டா வோல்ட் தெரிவித்துள்ளது. தற்போது இந்த பேட்டரி 100 மைக்ரோ வாட்ஸ்களை ஜெனரேட் செய்து 3 வோல்ட் மின்சாரத்தை உருவாக்க முடியும் என்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் 1 வாட் ஆற்றலை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட பேட்டரியை வழங்குவதை இலக்காக கொண்டு இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த தலைமுறை பேட்டரி: ஐசோடோப்புகள் உருக்குலைவதில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்யும் தொழில் நுட்படம் இந்த பேட்டரியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றலை அதன் பிறகு மின்சாரமாக மாற்றி இந்த பேட்டரியில் பயன்படுத்தப்படும். 20 ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக இந்த முறை ஆய்வு செய்யப்பட்டது. இந்த அடுத்த தலைமுறை பேட்டரி தற்போது சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஏரோஸ்பேஸ்: சோதனைகளுக்கு பிறகு அவை போன்கள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றில் வணிக பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் என்று பீட்டா வோல்ட் கூறியுள்ளது. ஏரோஸ்பேஸ், ஏஇ கருவிகள், மெடிக்கல் கருவிகள், மைக்ரோபிராச்சர்ஸ், மேம்படுத்தப்பட்ட சென்சார், சிறிய டிரோன்கள் மற்றும் மைக்ரோ ரோபோட்களில் ஆகியவற்றின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று பீட்டாவோல்ட் தெரிவித்துள்ளது.