கருணாவின் மீள் வருகை கிழக்கு அரசியலில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள்!
“அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை” என்று சொல்வார்கள்.
அந்த வகையில் கிழக்கு மாகாண அரசியல் களத்தில் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனின் மீள் வருகை அதனால் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு அரசியலில் ஏற்படப் போகும் பாதக, சாதக நிலை குறித்து கடந்த காலத்தின் அடிப்படையில் ஆராயவேண்டி உள்ளது.
அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு கல்லடியில் திறந்து வைக்கப்பட்ட தமிழ் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைமைக் காரியாலய நிகழ்வில் பேசிய போது தெரிவித்த கருணா
“எமது கட்சி ஆரம்பித்து 7 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 8 ஆசனங்களையும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற தேர்தலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று 72 வருட வரலாற்றை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடித்தோம் என்று பெருமை பாராட்டி இருந்தார்.
இன் நிலையில் இலங்கையில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் கருணாவின் மீள் வருகை அவர் கூறியது போன்றே 70 வருடகால தமிழ் தேசியத்தை தோற்கடிப்பதற்கான வருகையா என்ற கேள்வி எழுகிறது?
அதையும் தாண்டி அவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு அவரால் பெற்றுக் கொடுக்கப்பட்ட நன்மைகள் என்ன என்ற கேள்வி எழுகிறது?
அம்பாறை மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கணிசமான வாக்குகளை பிரித்ததன் ஊடாக அம்பாறையில் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தது மட்டுமே அவரால் செய்ய முடிந்த அரசியல் நகர்வாக இருந்தது.
அதாவது கருணா போட்டியிட்ட அம்பாறை திகாமடுல்ல மாவட்டத்தில் கடைசியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நான்கு முஸ்லிம் உறுப்பினர்களும் மூன்று சிங்கள உறுப்பினர்களும் என மொத்தமாக எழுவர் பாராளுமன்றிற்குத் தெரிவாகியிருந்தனர்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 126012 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 102274 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43319 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் தேசிய காங்கிரஸ் 38911 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தது.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுரன சார்பில் விமலவீர திசாநாயக்க 63594 வாக்குகளையும் வீரசிங்க 56006 வாக்குகளையும் திலக் ராஜபக்ஷ 54203 வாக்குகளையும் ஜக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எச்.எம்.எம்.ஹரிஸ் 36850 வாக்குகளையும் பைசால் காசிம் 29423 வாக்குகளையும் தேசிய காங்கிரஸ் சார்பில் ஏ.எல்.எம். அதாஉல்லா 35697 வாக்குகளையும் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஷர்ரப் 18389வாக்குகளையும் பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் அங்கு அகில இலங்கை தமிழர் மகாசபை சார்பில் போட்டியிட்ட கருணா தரப்பும் எவ்வித ஆசனங்களையும் பெறாத நிலையில்
29379வாக்குகளை பெற்று தோல்வியைத் தழுவியிருந்தது.
இதன் ஊடாக அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் தங்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழந்து அரசியல் அநாதைகளாக்கப்பட்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட த.தே.கூட்டமைப்பு 25255 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இதனால் இலங்கை தமிழ் அரசு கட்சியினால் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) எவ்வித ஆசனங்களையும் பெற முடியவில்லை.
கருணாவின் சார்புக் கட்சி த.தே.கூட்டமைப்பை விட 4124 வாக்குகளை அதிகமாக பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்திருந்தனர்.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை சம்மாந்துறை பொத்துவில் கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் 05 இலட்சத்தி 13 ஆயிரத்தி 979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 402344 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 385997 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக பதிவானதோடு 16347 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆக அம்பாறை மாவட்டத்தில் கருணாவின் அரசியல் பிரவேசம் தமிழ் மக்களுக்காக கிடைக்கவிருந்த ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தது என்ற விமர்சனமே இன்று வரை உள்ளது.
இருந்தும் 29,379 வாக்குகளை அம்பாறை தமிழ் மக்கள் கருணாவுக்கு அளித்திருந்தனர் என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும்.
சூழ்ச்சிகளும், பிரித்தாளும் தந்திரங்களும் ஒரு நியாயத்தின் அடிப்படையில் இருந்தே உருவாக்கப்படுகின்றது.
அந்த அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியலா ஏமாற்றப்பட்ட அம்பாறை தமிழ் மக்களின் தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகளும், அம்பாறையில் தமிழர்களின் இருப்பு குறித்த அச்சமுமே கருணாவின் கடந்த கால கருப்பு பக்கங்களையும் தாண்டி கருணாவுக்கு வாக்களிக்க தூண்டியது.
கருணாவை ஒரு மீட்பாராக, ஆபத்பாண்டவராக எண்ணியே அம்பாறை மக்கள் வாக்களித்திருந்தனர்.
ஆனால் அந்த வாக்குகளால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதோடு கருணாவால் ஒரு சிறிய அரசியல் பதவியை கூட பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.
கருணா தமிழர் தரப்பை தோற்கடிக்கும் கருவியாக பயன்படுத்தப் பட்டாரே தவிர கருணாவால் அவர் சார்ந்த அரசுடன் பேரம் பேசி எதனையும் பெற முடியவில்லை.
இன் நிலையில் கருணாவின் மீள் வருகை இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தை இலக்கு வைத்ததாக மாறியிருக்கிறது.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய அரசியல் களம் கத்திகளுக்கு மேல் ஊஞ்சலாடி வரும் நிலையில் கருணாவின் மீள் வருகை தமிழ் தேசிய அரசியலுக்கு மிகவும் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட ஆளும் கட்சி சார்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள நிலையில் மூன்றாவதாக கருணா அவர்களும் போட்டியிடும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களின் வாக்குகள் கணிசமான அளவு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்.
அரசியலில்உள்ள இரண்டு பிரதான ஆளும் கட்சி, எதிர் கட்சிகள தங்களது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்குடன் வாக்குகளை பிரித்தாளும் வீயூகமாகவே கருணாவின் கட்சிகளைப் போல் பல சுயட்சைக் குழுக்களும் தேர்தல் களத்தில் இறக்கி விடப்படுகிறது.
ஆளும் கட்சி, எதிர் கட்சிகளால் இவ்வாறு இறக்கிவிடப்படும் கருவிகளின் நோக்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே.
இதையே தமிழர் மகாசபை அம்பாறையில் செய்தது. இம்முறை மட்டக்களப்பில் செய்யப் போகிறதா என்ற கேள்வி எழுகிறது?
ஆளும் கட்சியாக இருந்தாலும் தமிழ் தேசியக் கட்சிகளாக இருந்தாலும் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை அழித்து தமிழ் மக்களை அரசியல் அனாதைகளாக்கும் செயற்பாடுகளுக்கு தமிழர்கள் ஒரு போதும் வாக்களிக்க மாட்டார்கள்.