தமிழரசு கட்சியின் தேர்தல் : யார் வெற்றிபெற்றாலும் அதிசயங்கள் நிகழாது!
தமிழரசு கட்சியின் தேர்தல் தொடர்பிலேயே எங்கும் பேசப்படுகின்றது. யார் அடுத்த தலைவர். அது யாராகவும் இருக்கலாம். ஒன்றில் எம்.ஏ.சுமந்திரன் அல்லது சி.சிறிதரன். சில வருடங்களுக்கு முன்னர் அடுத்த தலைவர் யாரென்று கேட்டால் சம்பந்தன் கூட சுமந்திரன் பக்கமே திரும்பியிருப்பார். கட்சியின் பெரும்பாலானவர்கள் மத்தியில் சுமந்திரனை தவிர்த்து எவரையும் சிந்திக்க முடியாதளவிற்கு நிலைமைகள் இருந்தன. ஆனால் இப்போது போட்டியிட்டுத்தான் சுமந்திரன் தனது தலைமைக்கான தகுதியை நிரூபிக்க வேண்டியிருக்கின்றது.
மிகவும் குறுகிய காலத்தில் சிறிதரன் ஒரு போட்டியாளராக மாறியிருக்கின்றார். ஆனால் இதே சிறிதரன் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, சுமந்திரனின் வெற்றிக்கு துணைநின்றார். சுமந்திரனை பாலசிங்கத்தோடு ஒப்பிட்டு பேசினார். பாலசிங்கம் வேறு சுமந்திரன் வேறு என்னும் சிறிய புரிதல் கூட இல்லாமல் இருந்த சிறிதரன், மிகவும் குறுகிய காலத்தில் சுமந்திரனுக்கு சவாலான ஒருவராக எவ்வாறு மாறினார் என்பது வியப்பாகவே இருக்கின்றது.
முன்னர் சுமந்திரனை பாலசிங்கத்தோடு ஒப்பிட்ட போது அமைதியாக இருந்த தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், இப்போது சுமந்திரன் தமிழ் தேசியத்தின் பக்கமாக நிற்க மாட்டார் என்று கூறும் போதும், அமைதியாகவே இருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தை முன்வைத்து ஒருவரை பற்றி ஆதரவாகவும் எதிராகவும் பேசுகின்ற போது, எனக்கு சோபாசக்தி எழுதிய “ம்” என்னும் நாவலே நினைவுக்கு வருவதுண்டு. எல்லாவற்றுக்கும் ம் போட்டுக் கொள்ளும் ஒரு கூட்டமே அரசியலை தீர்மானிக்கின்றது. இவ்வாறு அமைதியாக இருக்கும் உறுப்பினர்கள் உண்மையிலேயே யாரை ஆதரிக்கப் போகின்றார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
சுமந்திரன் போன்ற ஒருவரை விட்டால் தமிழரசு கட்சிக்கு வேறு வழியில்லை என்பவர்களும் கட்சிக்குள் இருக்கின்றனர். அதே வேளை, சுமந்திரன் தலைவரானால் தமிழரசு கட்சி அதன் தமிழ் தேசிய முகத்தை இழந்துவிடும் என்பவர்களும் இருக்கின்றனர். யாருக்கு அதிகம் செல்வாக்குண்டு என்பதுதான் இந்தப் போட்டியின் அடிப்படையாக இருக்கின்றது. இதற்கு காரணம் தற்போதைய நிலையில் தமிழரசு கட்சியின் சர்வதேச முகமாக இருப்பவர் சுமந்திரன் மட்டும்தான். அதற்கு சமதையான ஒருவர் கட்சிக்குள் இல்லை.
சிலர் நினைப்பது போன்று இது ஆங்கில மொழி சம்மந்தப்பட்ட விடயமல்ல. ஆங்கிலம் தெரியாவிட்டாலும் கூட, ஒருவர் தனது ஆளுமையை தமிழ் மொழியில் கூட நிருபிக்க முடியும். அப்படியும் சிறிதரன் இதுவரையில் நிரூபிக்கவில்லை. ஆங்கிலம் தெரிந்திருந்தால் அது மிகவும் நல்ல விடயம். அது தெரியாவிட்டால் அது ஒரு குறையல்ல ஆனால் ஒருவர் தனது சொந்த மொழியில் தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டும். இவர் ஒரு விசயமுள்ளவர் என்று மற்றவர்கள் எண்ண வேண்டும். சுமந்திரன் தனக்கு கிடைத்த வாய்ப்பை, தன்னை நிரூபிப்பதற்காக உச்சளவில் பயன்படுத்திக்கொண்ட ஒருவர். சுமந்திரன் தன்னையொரு யதார்த்தவாதியாகவும் அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் ஆனால் அவர் அரசியலை சூழ்நிலைகளுக்கு ஏற்ப கையாள முற்படவில்லை. இதற்கு சுமந்திரனை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. சம்பந்தன் முதல் காரணம் ஆனால் சுமந்திரன் சரியான விடயங்களை சம்பந்தனிடம் அறிவுறுத்தியிருக்க வேண்டும். அந்த வகையில் சுமந்திரன் கடந்த காலத்தில் அரசியலை யதார்த்தபூர்வமாக கையாளவில்லை.
சுமந்திரன் மீது எவ்வாறான விமர்சனங்களை முன்வைக்க முடியுமோ, அந்த விமர்சனங்கள் அனைத்தையும் சிறிதரன் மீதும் முன்வைக்க முடியும்.
இன்று சிறிதரன் சில விடயங்களை ஏற்றுக்கொண்டு பேசுகின்றார். 2015 – 2019 வரையான காலப்பகுதியில் நாங்கள் விடயங்களை கையாண்ட முறைமை பிழை என்கின்றார். குறிப்பாக இந்தியாவை நோக்கிச் செல்லாமை தவறு என்கிறார். இப்போதாவது, அவர் உண்மைகளை ஏற்றுக்கொண்டிருப்பதை வரவேற்கலாம். இதன் மூலம் சம்பந்தன் தவறிழைத்துவிட்டதாக மறைமுகமாக கூறுகின்றார். ஆனால் சம்பந்தன் தவறுசெய்கின்ற போது, அதனை தட்டிக் கேட்கும் ஓருவராக சிறிதரன் இருந்திருக்கவில்லை. அப்போது, சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் அணுகுமுறைகளை முற்றிலுமாக ஆதரிக்கும் ஒருவராகவே சிறிதரன் இருந்தார்.
தலைமைக்கான போட்டி தமிழரசு கட்சிக்குள் மிகவும் தெளிவாகவே இரண்டு அணிகளை உருவாக்கியிருக்கின்றது. ஒன்று சுமந்திரனை தேசியவாதி இல்லை என்று வாதிடுகின்ற அணி. அடுத்தது, சிறிதரனை தேசியவாதி என்று வாதிடுகின்ற அணி. தமிழரசு கட்சிக்குள் தற்போது இடம்பெற்றுவரும் தலைமைக்கான போட்டி, பிறிதொரு வகையில் தமிழ் தேசியத்தை நிறுத்துப் பாhப்பதற்கான போட்டி போன்றே மடைமாற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் போட்டியில் எவர் வென்றாலும், இந்த இரண்டு அணிகளும் எதோவொரு வகையில், தொடர்ந்தும் கடச்சிக்குள் முட்டி மோதத்தான் போகின்றது.
2010இல் சம்பந்தனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்ட சுமந்திரன், 2015இல், இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம், தன்னை தவிர்க்கவே முடியாத ஒருவராக ஆக்கிக் கொள்வதில் வெற்றிபெற்றார். தனக்கு சரியென்று கருதிய அனைத்தையும் பேசினார். அமிர்தலிங்கத்தை போல் என்னையும் கொல்லப் போகின்றீர்களா என்றும் கேட்டார். இதனால் தமிழ் தேசியம் என்று கூறிக்கொள்ளும் அரசியல் அரங்கில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால் அவ்வாறான விமர்சனங்களை கண்டு அவர் அஞ்சி ஒதுங்கவில்லை. அதே போன்று சுமந்திரன் மீதான விமர்சனங்களும் ஓயவில்லை. அது இப்போது மீண்டும் தூசு தட்;டப்படுகின்றது.
சுமந்திரன் அடிப்படையில் விடுதலைப் போராட்ட அரசியல் பின்புலம் அறியாதவர். எனவே, அவரிடம் அதனை எதிர்பார்க்கவும் முடியாது. சுமந்திரன் மற்றும் விக்கினேஸ்வரன் போன்றவர்களை, சம்பந்தன் அரசியலுக்குள் கொண்டுவந்ததும் இந்த நோக்கத்திற்காகத்தான். தமிழ் தேசிய அரசியலை தீவிரமாக முன்னெடுப்பது அவர்களுக்கான பணியாக கொடுக்கப்படவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் தேசிய நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் சம்பந்தனின் திட்டமாக இருந்தது. இங்கு பலரும் பார்க்கம் தவறுகின்ற விடயம் சம்பந்தன் அடிப்படையில் ஒரு தமிழ் தேசியவாதி அல்ல. அவ்வாறாயின் அந்த சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டு, அவர் அரசியலுக்கு கொண்டுவந்த சுமந்திரனிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. அத்துடன் இதுவரையில் சம்பந்தனோடும் சுமந்திரனோடும் இணைந்து பணியாற்றிவர்களின் தேசிய புரிதல் எத்தகையது? ஆனால் ஒரு விடயத்தில் சுமந்திரனிடம் நேர்மையிருந்தது. அதாவது, வாக்குகளுக்காக சுமந்திரன் பெரும்பாலும் நடிக்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்று போலியாக தேசியம் பேசவில்லை.
சிறிதரனின் பிரச்சினை வேறு. அவர் யுத்தத்திற்குள் சீவித்தவர். அந்த நிலமே அவரது அரசியலை செதுக்கியது. யுத்த நிலத்தில் வாக்குகளை சேகரிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்ற ஒருவர். அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவ்வப்போது சில விடயங்களை உச்சரிக்கத்தான் வேண்டும். இந்த பின்புலத்தில் நோக்கினால் சுமந்திரனும் சிறிதரனும் ஒரு அமைப்பிற்குள் இருக்கின்ற இரு வேறுபட்ட துருவங்கள். இவர்கள் இருவரும் ஒரு அமைப்புக்குள் இருப்பதே தமிழ் தேசியத்தின் விந்தைதான்.
இதற்கு காரணம் ஒரு போர் தோல்விக்கு பின்னரான அரசியலை முன்னெடுக்கும் உபாயங்கள் தொடர்பில் எவருமே சிந்திக்கவில்லை. 2009இற்கு பின்னரான தமிழ் தேசிய அரசியல் சரியாக முன்னிலைப்படுத்தப்படவில்லை. இதனால் கடந்தகாலத்தையே பலரும் தங்களின் மூலதனமாக்கிக் கொண்டனர். அவ்வாறான கடந்த காலம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வருகின்ற போது, அவர் என்ன செய்வது? ஒன்றில் அவர்கள் போலியாக நடிக்க வேண்டும் அல்லது தங்களுக்கு சரியென்பதை பேச வேண்டும். இன்று சாணக்கியன் போன்றவர்கள் விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசுவது சுத்தமான நடிப்பு. ஆனால் அதற்காக அவரைப் போன்றவர்களை குற்றம்சாட்ட முடியாது. அனைவருமே ஓட முடியாத குதிரைக்கு புண்ணாக்கு போடும் காரியங்களையே தமிழ் தேசியமாக அடையாளப்படுத்த முற்பட்டனர். ஒரு போர்த் தோல்விக்கு பின்னரான சூழலில், தோல்வியடைந்த அமைப்பை முன்னிலைப்படுத்தி அரசியலை முன்னெடுக்க முடியாது. ஆனால் அதனையே பலரும் செய்தனர். சுமந்திரன் அதனை செய்யாவிட்டாலும் கூட, அந்த மேடையில், நின்றவாறுதான் தனது திறமைகளை காண்பிக்க முற்பட்டார்.
இந்தத் தேர்தலில் எவர் வெற்றிபெற்றாலும் தமிழர் அரசியலில் எந்தவொரு அதிசயமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. ஏனெனில் தமிழர் அரசியலில் தீர்வு என்பது எப்போதோ முடிந்து போன காரியம். இனி எவர் வந்தாலும் எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்த முடியாது. சுமந்திரன் வெற்றிபெற்றால் அரசாங்கத்துடன் இணைந்துவிடுவார் என்றவாறான ஒரு கதையும் பேசப்படுகின்றது. அவ்வாறு இணைந்தால் கூட, அதில் ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் அரசாங்கத்தோடு இணைந்து பயணிப்பதும் பின்னர் வெளியேறுவதும், தமிழரசு கட்சியின் வரலாற்றில் புதிய விடயமல்ல. அதே வேளை கட்சியை உடைப்பார் என்றும் ஒரு கருத்துண்டு. ஒரு குறிப்பிட்ட இடம் தனக்கு பொருத்தமில்லை என்று கருதுகின்ற போது, சுமந்திரன் போன்ற ஒருவர் அங்கிருப்பதற்கான வாய்;ப்பும் இல்லைதான்.
இந்தத் தேர்தல் ஒரு விடயத்திற்கு பயன்படலாம். சுமந்திரன் வெற்றிபெற்றால் அவர் இதுவரையில் கூறியதை கட்சியினர் ஏற்றுக்கொண்டதாக பொருள் கொள்ளப்படும். அந்த வகையில் அவர் எதிர்காலத்திலும் தான் விரும்புவதை செய்யும் வாய்ப்புக்களை பெறுவார். சிறிதரனை முன்னிலைப்படுத்துபவர்கள், விடுதலைப் புலிகளின் தியாகத்தை முதலீடாக போடுகின்றனர். சிறிதரனும் அந்த அடிப்படையில்தான் பேசுகின்றார். பார்ப்போம் தமிழரசு கட்சியினரின் தெரிவை. அடிப்படையில் தமிழரசு கட்சியின் தேர்தலானது, அதன் தமிழ் தேசிய முகத்தை நிறுத்துப் பாக்கும் அடிப்படையிலேயே இடம்பெறப் போகின்றது. விடுதலைப் புலிகளை முதன்மைப்படுத்தும் தமிழ் தேசியவாதம், காலாவதியான ஒன்று என்று, தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கருதினால், சுமந்திரனே வெற்றிபெறுவார்.
யதீந்திரா