திருகோணமலையின் மீது இந்தியாவின் ஈடுபாடு!
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மூலோபாய பனிப்போர் தீவிரமடைந்துவருகின்றது. மாலைதீவு விவகாரம் இதற்கு வெள்ளிடைமலை. பொருளாதார தேவைகளை கருத்தில்கொண்டு, இந்தியாவின் அயல்நாடுகளிற்குள், அதன் செல்வாக்கை அதிகரிப்பதில் சீனா தீவிரம் காண்பித்துவருகின்றது. இலங்கையின் வடக்கு கிழக்கின் மீதான சீனாவின் ஈடுபாட்டை இந்த அடிப்படையில்தான் நோக்க வேண்டும். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் திருகோணமலை திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது.
திருகோணமலையின் மீதான இந்தியாவின் ஆர்வம் புதிய விடயமல்ல. இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டுவருகின்றது. இலங்கையின் அரசியல் காணப்படும் குழப்பங்களாலும், இலங்கை ஆட்சியாளர்களின் உறுதியற்ற வெளிவிவகார கொள்கையினாலும், திருகோணமலை திட்டங்கள் எதிர்பார்த்தவாறு முன்னெடுக்கப்படவில்லை. 1987 இந்திய – இலங்கை ஒப்பந்தந்தத்தின்படி, திருகோணமலை எண்ணைக் குதங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு இந்தியா வசமானது. எனினும் பிரேமதாச – பிரபாகரன் இந்திய எதிர்ப்பு உடன்பாட்டை தொடர்ந்து, நிலைமைகள் ஓரு இரவில் மாறின. இந்திய படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து, இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் உறைநிலைக்குச் சென்றன.
பின்னர், விடுதலைப் புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான ஒப்பந்த காலத்தில்தான் (2003), இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணக்கம்காணப்பட்ட விடயங்கள் மீளவும் மேசைக்கு வந்தது. திருகோணமலையின் எண்ணெய் குதங்கள், 35 வருட குத்தகைக்கு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் 2015வரையில், இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் திருகோணமலையில் செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. ஏனெனில் – 2003இல் இணக்கம்காணப்பட்ட உடன்பாட்டின், சட்டரீதியான தகுதி தொடர்பில், இந்திய எதிர்ப்பு தேசியவாத குழுக்கள் நெருக்கடிகளை ஏற்படுத்தியதால், விடயங்களை முன்னெடுக்க முடியாமல் இருந்தது.
2015இல், ஆட்சி மாற்றம் ஏற்பட்;டதை தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். 28 வருடங்களுக்கு பின்னர் ஒரு இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். 1987இல் ரஜீவ்காந்தியின் விஜயம் இடம்பெற்றது. மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் பின்னர், திருகோணமலையை ஒரு பிராந்திய பெற்றோலிய மையமாக மாற்றும் திட்டத்திற்கு உதவுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக மோடி அறிவித்தார் – அதே வேளை, திருகோணமலையின், சம்பூரில் எரிசக்கி நிலையத்தை நிறுவும் திட்டத்தையும் முன்னெடுப்பதாகவும், அது இலங்கையின் மின்சக்தி தேவையை நிவர்த்திசெய்யும் பிரதான திட்டமாக இருக்கும் என்றும் மோடி அறிவித்தார்.
2022இல், திருகோணமலை எண்ணெய் குதங்களை அவிருத்தி செய்வதற்கான பிறிதொரு ஒரு உடன்பாடு செய்யப்பட்டது. கோட்டபாயவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, அதிகாரத்தை பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை ஒரு எரிசக்தி மையமாக மாற்றவுள்ளதாக அறிவித்தார்.
2023, பெப்ரவரியில், புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த, ரணில் விக்கிரமசிங்க, இந்திய திட்டங்களை முன்னெடுப்பதற்கான தயார் நிலையை வெளிப்படுத்தினார். இந்தியாவுடன் இணைந்து, திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை அறிவித்தார். இதன்போது, தென்னிந்தியாவிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான எண்ணெய் குழாய் பொருத்தும் திட்டம் தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டத்தையும் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார்.
திருகோணமலை திட்டங்கள் தொடர்பில் இவ்வாறான அறிவிப்புக்கள் வெளியான போதிலும் கூட, இலங்கையின் அரசியலில் அவ்வப்போது ஏற்படும் ஏற்ற – இறக்கங்களால், திட்டங்களை முன்னெடுப்பதில் முட்டுக்கட்டைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. சீன சார்ப்பு குழுக்கள் தொடர்ந்தும் இந்திய திட்டங்களுக்கு எதிரான போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
திருகோணமலை பற்றி, நெப்போலியனின் பிரபலமான கூற்று ஒன்றுண்டு. அதாவது – “திருகோணமலையை எவர் கட்டுப்படுத்துகின்றாரோ அவர் இந்து சமுத்திர பிராந்தியத்தை கட்டுப்படுத்துவார்”. 18ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய பிரதமராக இருந்த, வில்லியம் பிட் த ஜங்கர், திருகோணமலை பற்றி குறிப்பிடும் போது, “காலனித்துவ உலகின் மிகவும் பெறுமதியான சொத்து” என்று குறிப்பிட்டார். திருகோணமலையின் மூலோபாய முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதற்கு இந்தக் கூற்றுக்கள் போதுமானது.
1980களில் மேற்குலகின் கொள்கை திட்டமிடல் சமூகத்தினர் மத்தியில், திருகோணமலை அதிக கவனத்தை பெற்றது. இந்தக் காலத்தில், திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்கப் போவதான கதையொன்றும் பரவியிருந்தது. அது பனிப்போர் காலம். இந்தியா அப்போது சோவியத் சார்பு நிலையில் இருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், இந்திராகாந்தி நிர்வாகம் அப்போதைய ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிர்வாகம் தொடர்பில் சந்தேகம் கொண்டது.
இந்தக் காலத்தில், இலங்கையின் உள்ளக அரசியலில் புதிய நெருக்கடிகள் ஏற்பட்டது. இலங்கையின் அரசியல் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்தது. தமிழர்களின் ஜனநாயக கோரிக்கைகள், ஆயுதப் போராட்டமாக வெளித்தெரியத் தொடங்கியது. தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு ஆயுதப் போராட்ட குழுக்கள் வளர்சியடைந்து கொண்டிருந்த காலம். அன்றைய சூழலில், ஆயுதப் போராட்ட அமைப்புக்கள் அனைத்துமே தமிழ் நாட்டைத்தான், பின்தளமாக பயன்படுத்திக் கொண்டிருந்தன. தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள், ஈழ ஆயுத நடவடிக்கைகளுக்கு உதவியளித்தன. இலங்கையின் உள்விவகாரம் முதல் முதலாக, தென்னிந்தியாவிற்குள் தாக்கங்களை ஏற்படுத்தியது. நிலைமைகள் சிக்கலடைந்ததை தொடர்ந்து, இலங்கையின் உள் விவகாரங்களில் தொடர்ந்தும் எட்டி நிற்க முடியாதென்னும் சூழலில்தான், இந்தியாவின் நேரடியான தலையீடு நிகழ்ந்தது. இதன் விளைவாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவானது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு இரண்டு இலக்குகள் இருந்தன – ஒன்று, வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்டு வாழும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நியாயமானதொரு தீர்வை காண்பது – இரண்டு, இலங்கையின் உள்ளக அரசியல் மோதல்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதை தடுப்பது. இந்த அடிப்படையில்தான், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில், மேற்படி இரண்டு விடயங்களும் உள்வாங்கப்பட்டன.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறிப்பிடுவதனால், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, திருகோணமலை விடயங்களில் தலையீடு செய்யும் உரித்து இந்தியாவிற்குண்டு. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும், இந்திய பிரதமர் ராஜீவ்காந்திக்கும் இடையில் பரிமாறப்பட்ட கடிதங்களின் அடிப்படையில், திருகோணமலை துறைமுகம் மற்றும் ஏனைய எந்தவொரு துறைமுகங்களும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தபடக் கூடாது. இதன் உள்ளடக்கம் என்னவென்றால் அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கான ராஜதந்திர நகர்வுகள் தோல்வியடையும் பட்சத்தில் இந்தியா இராணுவரீதியான தலையீடுகளை கருத்தில்கொள்ள முடியும். அதே வேளை இரண்டு தலைவர்களுக்கும் இடையில் பரிமாறப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் திருகோணமலையின் அபிவிருத்தியிலும் இந்தியாவிற்கு முதன்மையான பங்குண்டு.
இந்திய கொள்கை திட்டமிடல் சமூகத்தை பொறுத்தவரையில், இந்திய வரலாற்றியலாளரும், ராஜதந்திரியுமான, கே.எம். பணிக்கரே, முதல் முதலாக திருகோணமலையின் முக்கியத்துவம் தொடர்பில் பேசியவர். அவர் 1940இல் எழுதிய, இந்தியாவும் இந்து சமுத்திரமும் ( India and the Indian Ocean: an essay on the influence of sea power on Indian history ) என்னும் நூலில்தான், இந்த விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார் – அதாவது, கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இன்றியமையதவை. அம்பாந்தோட்டை துறைமுகம் முற்றிலும் சீனாவின் வசமாகியிருக்கும் நிலையில், இந்தியாவினால் விட்டுக்கொடுக்கப்படவே முடியாத, ஒரு மூலோபாய சொத்தாகவே திருகோணமலை இருக்கின்றது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் முயற்சியில் ஈடுபட்டுவரும் பின்னணியில் இந்தியாவின் திருகோணமலை திட்டங்கள் இன்றியமையாதவை. இந்தியாவின் திருகோணமலை திட்டங்கள், இலங்கையின் பொருளாதார வளர்சியில் பிரதான பங்குவகிக்கும். திருகோணமலையில் இந்தியாவின் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், அதனால், மக்கள் தங்களின் நிலங்களை இழக்க வேண்டிவரும் என்றவாறான போலியான கதைகளை சீன சார்பு தேசியவாத குழுக்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்;டன.
மகிந்த ராஜபக்சவின் ஊழல் நிர்வாகத்தை சீனா மிகவும் தந்திரமாக பயன்படுத்திக்கொண்டது. மகிந்தவின் ஒரேயொரு நோக்கம், தங்களுடை குடும்ப அதிகாரத்தை பாதுகாப்பது மட்டும்தான், என்பதை புரிந்துகொண்ட சீனாவிற்கோ, ராஜபக்சக்களை கையாள்வது மிகவும் இலகுவாக இருந்தது. சர்வாதிகார பண்புள்ள ஆட்சியாளர்கள்தான், சீன விஸ்தரிப்புவாத இலக்கிற்கான முதலீடாகும். அவர்களை தங்கள் வசப்படுத்துவதன் ஊடாக, அதன் நீண்டகால இலக்கிற்கான அடித்தளங்களை சீனா போட்டுக் கொள்கின்றது. ஒரு பிரித்தானிய அரசியல்வாதி குறிப்பிட்டது போன்று, “சீனா முதலில் மேசையில் பணத்தையே காண்பிக்கின்றது. இதனால்தான் சீனாவினால் வேகமாக சிறிய நாடுகளை வளைக்க முடிகின்றது, ஆனால் நாங்கள்?” என்கின்றார் அந்த அரசியல்வாதி. சீனாவின் வேகத்திற்கு ஏற்ப, அதன் வீயுகங்களை எதிர்கொள்வதில், இந்திய மேற்குல அணுகுமுறையின் வேகம் போதாது என்பதே, பல ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
சீனாவின் வெளிவிவகார கொள்கையில், நாடுகளின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கு எந்தவொரு இடமும் இல்லை. உள் விவகாரங்களில் தலையிடாக் கொள்கை முன்வைக்கும் சீனா, மறுபுறம் அதனையே ஒரு தலையீடும் கொள்கையாக கடைப்பிடிக்கின்றது. பணத்தை காண்பித்து, நாடுகளின் இறைமையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே சீனாவின் தந்திரம். அதாவது, யுத்தமில்லாமல் வெல்லுவது.
இந்தப் பின்புலத்தில் இலங்கைத் தீவை யுத்தமில்லாமல் வெல்லும் நகர்வுகளை சீனா எப்போதோ ஆரம்பித்துவிட்டது. இலங்கையின் இறைமையை சீனா நிலத்திலும் கடலிலும் மீறிவருகின்றது என்று, 2020இல் இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ கூறினார். இந்தியாவின் திட்டங்கள் அவ்வாறு பறிபோன இறைமையை பாதுகாக்கும், மீட்டெடுக்கும் திட்டங்களாகவே அமையும். வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசிய அரசியல் தரப்புக்களும் மற்றும் புத்திஜீவிகள், சிவில் சமூக குழுக்கள் என்போரும், இதனை ஆழமாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
யதீந்திரா