ஆர்ப்பாட்ட காரர்களை சுற்றி வலைத்த பொலீசாரினால் அடக்குமுறைக்குள் போராட்டம் நடைபெற்றது.
சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி இன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் நடைபெற்ற போராட்ட பேரணி நீதிமன்ற தடை உத்தரவு மற்றும் பொலீசாரின் சுற்றிவலைப்புக்கு நடுவில் நடைபெற்றது.
கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை நடைபெற இருந்த மேற்படி ஆர்பாட்ட பேரணியை நீர்தாரை பிரயோகிக்க செய்யும் வாகனங்களுடன் வருகை தந்த கலகம் அடக்கும் பொலீசாரால் சுற்றி வலைக்கப்பட்டு ஒரு அங்குலம் கூட நகர விடாத நிலையில் மட்டக்களப்பு கல்லடி புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் நின்று கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இப் போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், மற்றும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அமைப்பின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் மற்றும் பாதர் யெகதாஸ் ஆகியோர் பொலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் பொலிசாரின் அடக்குமுறைக்கு நடுவில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றதோடு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் சுதந்திர தின கரிநாள் பிரகடனம் வாசிக்கப்பட்டது.