மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழு தீர்மானங்களை மீறி பெரும்பான்மை இன மண் மாபியாக்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் செயற்பாடுகளில் செங்கலடி, கிரான் பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க அமைச்சரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அபிவிருத்தி குழு தீர்மானங்களை மீறி மண் அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி செங்கலடி பிரதேச செயலாளர் மண் அனுமதி பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்துள்ளார்.
இவ்வாறு பிரதேச செயலாளர் கையொப்பம் இட்டு புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ள பெயர் விபரங்களை நான் இங்கு வாசித்துக் காட்டுகிறேன்.
இவ்வாறு பிரதேச செயலாளர் அனுப்பி உள்ள பெயர்களில் அதிகமான பெயர்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கே அதிக மண் அனுமதி பத்திரம் வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களின் படி 13 பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கிரவல், ஆற்று மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்குமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
தடை விதித்த இராஜாங்க அமைச்சர்!
ஏற்கனவே செங்கலடி பிரதேச அபிவிருத்தி குழு தீர்மானத்தின் ஊடாக ஆற்றுமணல் அகழ்வு மற்றும் கிரவல் அனுமதிக்கு தடை விதித்திருந்த நிலையில் புதிய அனுமதிப் பத்திரங்களை வழங்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் மேற்படி தீர்மானங்களை எல்லாம் புறக்கணித்து செங்கலடி பிரதேச செயலாளரினால் புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு மேற்டி பெயர் பட்டியல் அனுப்பபட்ட நிலையில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி அனுப்பபட்ட சிபாரிசுகளை நிறுத்துமாறு அரசாங்க அதிபருக்கு அறிவித்ததன் அடிப்படையில் குறித்த பெயர் பட்டியலை நிறுத்தி வைக்குமாறு அரசாங்க அதிபர் புவிச்சரிதவியல் திணைக்களத்திற்கு வேண்டுகோள் விடுத்ததன் பிரகாரம் அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சருக்கு எதிரான உண்ணாவிரதம்!
இன் நிலையில் மேற்படி பிரதேச செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட பெயர் பட்டியலை இடைநிறுத்தியதன் காரணமாகவே எனக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் எனக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்ட நடைபெற்றது. எனக்கு கூறினார்.