வெடுக்குநாறி மலை சம்பவத்திற்கு பின்னரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படும் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக இருப்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
வெடுக்குநாறி மலையில் நடந்த சம்பவத்திற்கு அரசுடன் இருக்கும் அமைச்சர்கள் வெட்கி தலைகுணிய வேண்டும்!
வவுனியாவில் வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினத்தன்று பொலீசார் சப்பாத்து கால்களுடன் சென்று தாக்குதல் நடாத்தியதோடு அராஜகத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கூட கால், கைகளை பிடித்து இழுத்து கொண்டு போன சம்பவத்தை ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.
இது இந்த நாட்டிலே தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
ரணில் ஆட்சி வந்தால் சரி, கோட்டா ஆட்சி வந்தால் சரி, மகிந்த ஆட்சி வந்தாலும் சரி மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த தலைவர்களின் செயற்பாடுகளாக தமிழ் மக்களின் மத ரீதியான வழிபாடு செய்கின்ற தளங்களை இல்லாமல் செய்கின்ற செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட குசலாணை மலையை கைப்பற்ற முயற்சி நடைபெற்றது. இது போன்று எல்லா மாவட்டத்திலும் திருகோணமலையில் அரிசி மலை, முல்லைத்தீவு மாவட்டத்தில் குறுந்தூர்மலை, வவுனியாவில் வெடுக்குநாறி மலை என மலையைக் கண்டாலே பொலீசாரும், பௌத்த பிக்குகளும் அதனை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவரவே முயற்சிக்கின்றனர்.
ஜனாதிபதியை சந்திக்கும் போது அவர் இந்த தொல்பொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக தெரிவித்தார் ஆனால் இன்று இரண்டு வருடங்களாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
ஆனால் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்படும் தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெட்கப்பட வேண்டும். என தெரிவித்தார்.