கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும் அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதிகோரிய போராட்டம் 11 ஆவது நாளாக இடம்பெற்றுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு இன்று ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து பொதுமக்களுடன் இணைந்து நடைபவணியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள போராட்ட இடத்தினை வந்தடைந்தனர்.
அமைச்சரவை தீர்மானம்
இதன் போது அமைச்சரவை தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் கல்முனை உப பிரதேச அலுவலகமாக கருதி மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தீர்மானங்கள் அனைத்தையும் இரத்து செய்யுங்கள் காணி நிதி அதிகாரங்களை வழங்குங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன தொழிற்பாட்டை உறுதிப்படுத்துங்கள் என பல்வேறு கோஷங்களை முன்வைத்து போராடி வருகின்றனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் செல்வராஜா கஜேந்திரன் உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கொடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம மக்கள் நடைபவனியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் பொது அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரிய போராட்டத்துக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.