பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் 8வது சர்வதேசத் தமிழியல் ஆய்வுமாநாடு நாளை 24. 04. 2024 ஆம் திகதி “பன்முக நோக்கில் திருக்குறள்” என்ற பொருண்மையில் கலைப்பீடத்தின் கருத்தரங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில், பிரதம விருந்தினர் உரையைப் பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் டபிள்யு. எம். டி. மதுஜித் அவர்களும், சிறப்பு விருந்தினர் உரையை கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏக்கநாயக்க அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.
மாநாட்டின் ஆதாரசுருதி உரையினை தமிழ்நாடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் துறைத்தலைவரும் தமிழியல் ஆய்வுப்பரப்பில் நன்கு அறியப்பட்டவருமான பேராசிரியர் அ. ராமசாமி “திருக்குறள் : மறுவாசிப்பும் பலதள வாசிப்புகளும்” என்ற தலைப்பில் ஆற்றவுள்ளார்.
இலங்கை, தமிழக ஆய்வறிஞர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுமாநாட்டின் அமர்வுகளை, தகைசார் பேராசிரியர் அ. சண்முகதாஸ், ஓய்வுநிலைப் பேராசிரியர் எம். ஏ. நுஃமான், சிரேஷ்ட பேராசிரியர் பீ. எம். ஜமாஹூர், நூலகர் இரா. மகேஸ்வரன் ஆகியோர் தலைமைதாங்குகின்றனர். பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் அரங்கு, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அரங்கு, பேராசிரியர் வி. செல்வநாயகம் அரங்கு, பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங்கு ஆகியவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி (திருமதி) எஸ். ஆர். தேவர் மற்றும் கலாநிதி பெருமாள் சரவணகுமார் ஆகியோர் ஆய்வு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர்.