இன்று தமிழரசுக் கட்சியின் 17வது தேசிய மாநாடு நடைபெற உள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவின் ஊடாக தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபடும் என பலரும் எதிர்வு கூறிவருகின்றனர்.
தமிழர்களின் உரிப்போராட்ட வரலாற்றில் தமிழ் தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் வடகிழக்கு தமிழ் மக்களுக்கான சமஷ்டியை கோரி தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி இன்று பாராளுமன்ற கதிரைகளுக்காகவும் கட்சி தலைமைப் பதவிக்காகவும் கட்சியில் உள்ளவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்ளும் நிலமை உருவாகி உள்ளதை பார்த்து தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியும் நிலை உருவாகி உள்ளது.
இதுவரை 16 கட்சி தேசிய மாநாடுகள் நடைபெற்ற நிலையில் எந்த கட்சி தேசிய மாநாட்டிலும் தலைவர் பதவிக்காக பலர் போட்டியிட்டதோ அல்லது தேர்தல் நடத்தப்பட்ட வரலாறோ இல்லை என கூறப்படுகிறது.
இன் நிலையில் தற்போது மட்டும் ஏன் இவ்வாறான ஒற்றுமை அற்ற தன்மை கட்சிக்குள் நிலவுகிறது இதற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுகிறது?
கட்சிக்குள் தலைவர் பதவிக்காக மூன்று பேர் போட்டியிடுவது, மாவட்டம் மாவட்டமாக சென்று பொதுச் சபை உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவது , பொதுச் சபை உறுப்பினர்களிடம் தனித் தனியாக ஆதரவு திரட்டுவது என இரண்டு அணிகளை உருவாக்கி விட்டு அதனை ஜனநாயகம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
ஒரு வாக்கினால் ஒரு தலைவர் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தவருக்காக வாக்களித்தவர்களின் மனநிலை அவர்களின் நியாயப்பாடுகளை எவ்வாறு அனுகப் போகிறது தமிழரசுக் கட்சி.
எனவே நாளையதினம் நடைபெற இருக்கும் கட்சியின் தேசிய மாநாடு தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை நிச்சயமாக எழுத இருக்கிறது.
அது தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் வரலாற்றில் மிக மோசமான பதிவாக இருக்க கூடாது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
யார் தலைவராக வந்தாலும் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம் என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்திருந்தாலும் அது கட்சியில் உள்ள அனைவரின் முடிவா என்பது தெரியவில்லை.
இதேவேளை வழமை போல் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி இம்முறையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக என்னை தலைவராக தெரிவு செய்தால் எமது அணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களை பொதுச் செயலாளராக நியமிக்க ஆதரவு தருகிறோம் என்று பேரம் பேசுப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு பேரும் இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கி உள்ள நிலையில் இம்முறை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மட்டக்களப்பிற்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும் நாளை தெரிவு செய்யப்படும் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கு பின்னால் உள்ள பிராந்திய, புலம்பெயர் சக்திகளின் கைகளிலேயே வடகிழக்கு தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் குறித்த நகர்வுகள் இருக்கப்போகிறது.
அது உரிமைக்கான அரசியலா சலுகைகளுக்கான அரசியலா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.