லண்டனில் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை நடத்தப்படும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளின் கொடிகளுடனும், தனிநாட்டுக் கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளுடனும் பெருந்திரளானவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தன்று இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளின் கொடிகளுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கறுப்புக் கொடிகளையும், விடுதலைப் புலிகளின் கொடிகளையும் ஏந்தியவாறு இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பிரித்தானிய அரசாங்கத்திற்கு முறையிடவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனப் படுகொலை இடம்பெற்றதாகவும் எனவே, இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.