ஆளும் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் அளித்த வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்படும் போது அதற்கு ஆதரவாக வாக்களிப்பதுதான் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கும் அரசியலா? என தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கையில் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருத்துச் சுதந்திரத்தை மிக மோசமாக பாதிக்கும் என்று கூறப்பட்ட நிகழ்நிலை சட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்கள் வியாழேந்திரன், பிள்ளையான் உள்ளிட்ட நான்கு தமிழ் பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் உள்ள 18 தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களில் 4 பேர் மாத்திரமே நேற்றைய “நிகழ்நிலை ” சட்டத்திற்கான வாக்களிப்பில் ஆதரவான வாக்களித்துள்ளனர்.
அதாவது பாராளமன்ற உறுப்பினர்களான டக்லஸ் தேவானந்தா , திலீபன், பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் நேற்று “நிகழ்நிலை ” சட்டத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர் .
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடம் நேரில் சந்தித்து “நிகழ்நிலை ” சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
சாதாரண இணைய பதிவுகளுக்காக, சமூக வலைத்தள பதிவுகளுக்காக பதிவிட்டவர்களை குற்றவாளியாக்கும் இந்த சட்ட வரைவிற்கு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களே துணை போனமையை நியாயப்படுத்த முடியாது.
இதற்கு பின்னர் இந்த சட்டத்தால் ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படும் போது அதற்கு எதிராக இவர்களால் எவ்வாறு செயற்பட முடியும்.
வடக்கு கிழக்கில் அபிவிருத்தி அரசியல் பற்றி பேசும் இவர்கள் தமிழ் மக்கள் இவர்களுக்கு வழங்கிய வாக்குகளை தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் சக்தியாக மாற்றுவதற்கு தவறி விடுகின்றனர்.
பாராளமன்ற உறுப்பினர்கள் முதலீடு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தானதாக இருக்கும் சட்ட வரைவிற்கு எப்படி ஆதரவாக வாக்களித்தார்கள் ?
அரசுக்கான ஆதரவு என்பது அரசு சொல்வதற்கொல்லாம் ஆமா போடுவது அல்ல இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை தமிழ் இன மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற உறுப்பினர்கள் வாக்களித்த மக்களின் எண்ணங்களை, அவர்களது பாதுகாப்பை, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே செயற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அரசுடன் இணைந்தவர்கள் அரசின் தவறான முடிவுகளுக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் எதிரான பல சட்டங்களுக்கு தொடர்ச்சியாக வாக்களித்தே வந்துள்ளனர்.
அது
“நிகழ்நிலை ” சட்டத்திற்கு மாத்திரம் இவர்கள் வாக்களிக்கவில்லை
வற் வரி 18 % அதிகரிப்புக்கு ஆதரவாகவும் வாக்களித்தார்கள்.
பாதுகாப்பு அமைச்சின் மீதான நிதி ஒதுக்கீடுகளுகும் ஆதரவாக கை வாக்களித்தார்கள்.
தொல்லியல் திணைக்களத்தின் மீதான நிதி ஒதுக்கீட்டுக்கும் ஆதரவாக வாக்களித்தனர்.
இலங்கைத் தீவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான ராஜபக்சே ஆட்சியாளர்களின் 20 ஆம் திருத்த சட்டதிற்கும் ஆதரவாக இவர்கள் வாக்களித்தனர்.
இது போதாதென்று ரூபா 600 பில்லியன் வருமான இழப்பை ஏற்படுத்திய கோட்டாபய ராஜபக்சேவின் வரி சீரமைப்புக்கும் இவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக இவர்கள் எதிர்வரும் காலங்களில் கொண்டுவரப்போகும்பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கும் ஆதரவாக வாக்களிப்பார்கள்?
அபிவிருத்தி அரசியல் என்பதற்கு ஆழமான புரிதலும் செயற்பாடும் தேவை.
அரச வேலை பெற்றுக் கொடுத்தல், மின்சார இணைப்பு பெற்றுத் தருதல், வீட்டுத் திட்டத்திற்கு சிபாரிசு செய்தல்
உள்ளுராட்சி நிறுவனங்களின் வீதிகளுக்கு கிரவல், கல்லு பறித்தல் என்பன மாத்திரம் அபிவிருத்தி அரசியல் அல்ல.
இலங்கை அரசின் பங்காளிகளாக இருந்தாலும் தங்களுக்கு வாக்களித்த மக்களின் எண்ணங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டியதே இவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு இவர்கள் செய்யும் கடமையாகும்.
இவர்களுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் அளித்த வாக்குகளை தமிழ் மக்களுக்கு எதிராக இவர்கள் அளிப்பதுதான் அரசியலா?