மட்டக்களப்பில் இருபது வருடங்களாக ஏமாற்றப்படும் முஸ்லீம் சமூகம் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் நேரடியாக எடுத்துரைத்த அலி சாகிர் மௌலானா !
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப காணிகள் இன்றி தவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அலிகார் மௌலானா தெரிவித்துள்ளார்.
இன்றைய(30) தினம் ஏறாவூர் நகர சபைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக் அவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானாவிற்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானா அவர்கள் நான்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை கையளித்து அதில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடி இருந்தார்.
அதில் மிக முக்கிய பிரச்சினையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தினரின் சனத்தொகை வளர்ச்சி மற்றும் அதற்கு ஏற்ப காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு சிபாரிசு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளை 24 வருடங்கள் தாண்டியும் இதுவரை வழங்கப்படவில்லை இது முஸ்லீம்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது இது குறித்தும், ஏறாவூர் நகர சபையின் கழிவகற்றல் பிரச்சினைக்கு பிரித்தானிய அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு பாரளுமன்றம் உறுப்பினர் அலிசாகீர் மௌலானாவினால் கையளிக்கப்பட்டது.