சட்டவிரோத தராசுகளில் நெல் கொள்வனவு! விவசாயிகளிடம் கொள்ளையடித்தவர்கள் திடீர் சோதனையில் சிக்கினர்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத தராசுகளை பயன்படுத்தி நெல் கொள்வனவில் ஈடுபட்டவர்கள் இன்று விவசாயிகளிடம் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்வனவு செய்ய வரும் தனியார் முதலாளிகள் சட்டவிரோத தடை செய்யப்பட்ட தராசுகளை பயன்படுத்தி நெல் கொள்வனவில் ஈடுபட்டிருந்த நிலையில் நெல் மூட்டைகளின் அளவில் சந்தேகம் கொண்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து தராசுகளை பரிசோதனை செய்ததில் 8 தராசுகள் பாவனையில் இல்லாத மற்றும் சீல் வைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட தராசுகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக விவசாயிகளின் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு ஏக்கருக்கு பத்து மூடைகளே நெல் அறுவடை மூலம் பெறப்படுகிறது.
அத்தோடு ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் 130 ரூபாயை செலவு செய்துள்ள போதும் ஒரு கிலோ நெல்லை 80 ரூபாய்க்கே தனியார் முதலாளிகள் கொள்வனவு செய்வதாகவும். 50 ரூபாய் நஷ்டத்திற்கே நெல்லை விற்பனை செய்யவேண்டிய நிலையில். நெல் கொள்வனவில் ஈடுபடும் முதலாளிகள் தடை செய்யப்பட்ட பாவனையில் இல்லாத தராசுகளை கொண்டுவந்து மேலும் மேலும் கொள்ளையில் ஈடுபடுவதால் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்படுவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்தன.
அரசாங்கம் நெல்லுக்கான சரியான நிர்ணய விலையை தீர்மானிக்காத நிலையில் நெல்லின் விலையை தீர்மானிக்கும் சக்தியாக தனியார் முதலாளிகளே உள்ளனர்.
இங்குள்ள விவசாயிகள் தொடர்ந்தும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் தனியார் முதலாளிகளிடமே தங்கி வாழவேண்டிய நிலையில் உள்ளோம் என கூறினர்.