மட்டக்களப்பில் சுருக்குவலை டைனமைட் மீன் பிடியை தடுப்பதற்கு கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகளான சுருக்குவலை, டைனமைட் ஊடாக மீன்பிடியில் ஈடுபடும் நபர்கள் அதிகரித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கடற்படை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.
சுருக்குவலை மற்றும் டைனமைட்களை கொண்டு மீன்பிடியில் ஈடுபடும் சட்டவிரோத மீன்பிடிப்பாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களை கைது செய்வதற்கான வழிமுறைகள் காணப்படவில்லை என்றும்,
கதிரவெளி, வாகரை தொடங்கி வாழைச்சேனை வரையில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோத மீன்பிடியாளர்கள் தற்போது ஏறாவூர் பற்று பகுதிகளிலும் அதிகரித்துள்ளதால் அவர்களை கைது செய்வதற்கான உதவிகளை களுவன்கேணி கடற்படையினரிடம் கோரிய போதும் அவர்களிடம் அதற்கான இயந்திரப் படகுகள் இல்லை என தெரிவித்ததால் குறித்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து கடற்படை அதிகாரிகளுடன் பேசி தீர்மானம் எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.