பல்கலைக்கழக ஊழியர்களுக்கு கடந்த 8 வருடங்களாக அதிகரிக்கப்படாது தொடர்ச்சியாக அரசினால் இழுத்தடிப்புச்
செய்யப்பட்டுவரும் 15% சம்பள உயர்வு கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று வந்தாறுமூலையில் நடைபெற்றது.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 தேசிய தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு ஒன்றிணைந்து இந்த வாரம் தொடக்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது என எடுத்த தீர்மானத்திற்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஒன்றறை நாள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அமைவாக, வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி தீர்மானத்திற்கு அமைவாக நேற்று செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணியுடன் தமது கடமைகளில் இருந்து விலகி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று புதன் முழுநாளும் முன்னெடுக்கப்படுகிறது.
அரசின் செயற்பாடுகளை வண்மையாக கண்டிக்கும் வகையிலான தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகள், செய்முறை பயிற்சிகள், கள விஜயங்கள் மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் முக்கிய கூட்டங்கள் பிற்போடப்பட்டு வருகின்றது.
2016ம் ஆண்டின் பட்ஜெட் முன்மொழிவுக்கு அமைய அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்ட 107% சம்பள அதிகரிப்பில், தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகள் காரணமாக பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பளம் 92% மட்டுமே அதிகரிப்புச் செய்யப்பட்டது. இதனூடாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிரான தொழிற்சங்க போராட்டமாகவே இது அமைந்துள்ளது.
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தருவதாக அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்டு இன்றுவரை வழங்கப்படாதுள்ள 15% சம்பள அதிகரிப்பை வழங்க கோரல், மாதாந்த இடர் கொடுப்பனவை அதிகரித்தல், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பள அதிகரிப்புச் செய்யுமாறு அரசை வலியுறுத்தல், பல்கலைக்கழகங்களில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பி நிருவாக விடயங்களை சுமுகமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
மேற்படி கோரிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி 2023.11.02, 2024.01.18 மற்றும் 2024.02.28 ஆகிய தினங்களில் அடையாள பணிபகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டபோதும் அவற்றுக்கு சாதகமான பதில்கள் அரசினால் வழங்கப்படாததன் காரணமாக இந்த ஒன்றரைநாள் திடீர் பணி பகிஷ்கரிப்பு நடைபெறுகின்றது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் சார்பில் வழங்கப்பட்ட ஊடக தெளிவூட்டலில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,
2016ம் ஆண்டைய சம்பள சீர்திருத்தத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 107% சம்பள உயர்வு வழங்கப்பட்டபோதிலும் அது பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கப்படாது பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இது தொடர்பில் கடந்த எட்டு வருடங்களாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தியும், அறிக்கைகள் சமர்ப்பித்தும், போராட்டங்கள் நடாத்தியும் தீர்வு வழங்கப்படவில்லை.
கல்வி அமைச்சர், நிதி இராஜாங்க அமைச்சர் போன்றோருடனான சந்திப்பின்போது மூன்று வாரங்களுக்குள் சம்பள உயர்வுக்கான நடவடிக்கை எடுப்பதாக உடன்பாடுகள் காணப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகின்றன. அத்துடன் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பதன் மூலம்
தீர்வுகள் வழங்குவதாகவும் பேசப்பட்டது.
ஆனால், இதற்குரிய தீர்வுகள் வழங்கப்படாதும், அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படாதும் தொடர்ந்து காலம் கடத்தப்படுகிறது.
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ஏகாம்பரம் ஜெகராஜு தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.