மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனான கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஏறாவூர் பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இன்றைய தினம் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிற்கு வருகைதந்த மயிலத்தமடு பண்ணையாளர் சங்கத்தினர் தங்கள் மீதான வழக்கு குறித்து இவ்வாறு தெரிவித்தனர்.
கடந்த வருடம் மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பிரச்சினை தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட 37 பேரில் 5 பேர் அன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாது ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எனவும் அவர்கள் மீது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள் என கூறி ஏறாவூர் பொலீசார் பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக குறித்த பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் – மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் – பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கெள்ளப்பட்டது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி செல்வி.தர்சினி அன்னாத்துறை முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படலாம் என சட்டத்தரணி ஜெயசிங்கம் அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் குறித்த வழக்கை தொடரப் போவதாக ஏறாவூர் பொலீசார் நீதிமன்றிற்கு தெரிவித்த நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.