கடைத் தெருவிற்கு வந்த கட்சி சண்டை! தமிழரசுக் கட்சியை இரண்டாக உடைத்த அந்த நபர் யார்
இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் இதுவரை காலமும் நடைபெற்று வந்த அதிகாரப் போட்டி தற்போது கட்சியின் தலைவருக்கான போட்டியில் வெளிப்படையாக தெரியவந்ததுடன் அது கட்சியின் செயலாளர் தெரிவின் போது பூதாகரமாக வெடித்துள்ளது.
தற்போது தமிழரசுக் கட்சியின் செயலாளர் சண்டை மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு அணிகளை உருவாக்கி ஏட்டிக்குப் போட்டியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது.
உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு துண்டு துண்டாக பிளவுபட்டதும் அதனை பிளவு பட தூண்டியவர்களுமே தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியை பிளவு படுத்தும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களின் செயற்பாடுகளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் முதிர்ச்சி அற்ற தன்மையும் இது போன்ற செயற்பாடுகளுக்கு பிரதான காரணமாகும்.
மிக முக்கியமாக வடகிழக்கு தமிழர்களின் அரசியலை கொழும்பில் உள்ள அதிகார வர்க்கமும் அவர்களுடன் இணைந்து செயற்படுவோரும் தீர்மானிக்க முயற்சிப்பதும், வடகிழக்கு தமிழர்களின் அரசியலை கொழும்பு அரசியலுக்குள் இருந்து கையாள முற்படுவதுமே இது போன்ற பிளவுக்கு காரணமாகும்.
வடகிழக்கில் உள்ள தமிழர்களின் உணர்வுகளை மதிக்காது, அவர்கள் வழங்கி தமிழ் தேசிய வாக்குகளை தென்னிலங்கையில் உள்ள ஆட்சியாளர்களுக்கு மறைமுகமாக அடகு வைக்கும் செயற்பாடுகளுக்காக ஒட்டுமொத்த தமிழரசுக் கட்சியையும் கைப்பற்ற நினைத்த சுமந்திரன் அணியினரால் அது ஏலாது போகவே கடைசியில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியின் ஊடாக தங்களது அதிகாரத்தை பிரயோகிக்க முடியும் என்ற நோக்கில் சுமந்திரன், சாணக்கியன், கலையரசன், குகதாசன் ஆகியோரில் ஒருவரை பொதுச் செயலாளராக கொண்டு வர வேண்டும் என்பதில் குறியாக இருந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு சூழ்ச்சிகளை கையாண்டதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை தற்போது கடைத் தெருவிருவிற்கு வந்து ஏனைய கட்சிகளின் கேலிக் கூத்துக்கு தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் மாறியிருக்கிறது.
இதன் தாக்கம் எதிர்வரும் தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழ் தேசிய அரசியலுக்கும் தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்த கொழும்பு அதிகார வர்க்கத்தின் முகவர்களுக்கும் இடையிலான பலப் பரிட்சைகள் இறுதியில் தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபட்டது என்ற செய்தியுடன் முடிவடைய இருக்கிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியை பிளவு படுத்தியவர்கள் யார் என்பதை வடகிழக்கு தமிழ் மக்கள் அடையாளம் கண்டு அவர்களை எதிர்வரு தேர்தலில் தோற்கடிக்காவிட்டால் தமிழரசுக் கட்சிக்குள் புற்றுநோய் போன்று இருக்கும் முகவர்கள் தமிழரசுக் கட்சியை அட்யோடு அழித்து விடுவார்கள்.