இலங்கையின் இலவச கல்வியை கேள்விக்குட்படுத்தும் ஒரு அம்சமாக பிரத்தியேக வகுப்பு கலாசாரம் உள்ளது. மாதச் சம்பளத்தைப் ஆயிரக்கணக்கில் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புகளை நடத்தி இலட்சக்கணக்கில் பணம் பெறுகின்றனர்.
ஒரு வகுப்பறையில் இருக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 35 என கல்வி அமைச்சு வரையறை செய்துள்ளது. 40 நிமிட பாடவேளையில் ஒரு ஆசிரியரின் கற்பித்தலை விளங்கிக்கொண்டு, அதற்கேற்ப விடயதானங்களை உள்வாங்கிக்கொள்ளும் சூழல் வகுப்பறையில் நிலவ வேண்டும்.
இதன் காரணமாகவே மாணவர் எண்ணிக்கை வரையறுக்கப்படுகின்றது. அதே போன்று ஆசிரியர்களும் குறித்த எண்ணிக்கையான மாணவர்களுக்கு மாத்திரமே ஒரு வகுப்பறையில் போதிக்கக்கூடிய உடல் உளத் தகுதிகள் மற்றும் திறன்களைக் கொண்டிருப்பர்.
ஆனால் இரண்டிலிருந்து மூன்று மணித்தியாலயங்கள் வரை சுமார் ஐந்நூறு மாணவர்களுக்கு பிரத்தியேகமாக கல்வி போதிப்பவர்களும் இதே ஆசிரியர்களாகத்தான் இருப்பர். இது குறித்து பெற்றோர்களும், கல்வி அமைச்சும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் எமது நாட்டில் பிரத்தியோக வகுப்புகளுக்கு பெற்றோர்கள் செலவிடும் தொகை குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப் பிட்டிய தெரிவித்துள்ள விடயங்கள் சிந்திக்க வைக்கின்றன. அரசாங்கமானது பாடசாலை கல்விக்கு செலவளிக்கும் தொகையை விட, பெற்றோர்கள் பிரத்தியேக வகுப்புகளுக்காக தமது பிள்ளைகளுக்கு முப்பது வீதம் பணத்தை ஒதுக்குகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரத்தியேக வகுப்புகளுக்காக ஒரு மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ இருபதாயிரம் ரூபாய் வரை ஒதுக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையில் 57 இலட்சம் குடும்பங்கள் உள்ளன. பெற்றோர்கள் கல்விக்காக சுமார் 122 பில்லியன் வரை செலவளிக்கின்றனர்.
2024 நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கமானது 546 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. மொத்த கல்வி செலவீனத்தில் பாடசாலைகள் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 402 பில்லியன்களாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றார். ஆனால் இலவச கல்விக்கொள்கைக்கு ஏற்ப, அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி மிகக்குறைவானதாகும் என்பது பொதுவான கருத்து.
சில மாதங்களுக்கு முன்பு இலங்கையின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த யுனிசெப் அமைப்பானது, ‘தெற்காசிய பிராந்தியத்தில் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகக் குறைந்த ஒதுக்கீட்டைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது’என்று தெரிவித்திருந்தமை முக்கிய விடயம். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% க்கும் குறைவான தொகையையே இலங்கை கல்விக்காக ஒதுக்குகிறது. சர்வதேச அளவுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகை என்று யுனிசெப் சுட்டிக்காட்டியிருந்தது.
பாடசாலை கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெறுமானத்துக்கேற்பவே ஆசிரிய வளங்களிலிருந்து ஏனைய அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளைக் கொண்டிருக்கும் சில பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றன. கூடுதலாக மலையகப் பிரதேசங்களில் இது அதிகம். குறித்த பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத காரணங்களினாலேயே மலையகப் பிரதேசங்களில் உயர்தர கணித விஞ்ஞான பாடசாலைகள் உருவாகவில்லை. இதன் காரணமாகவே குறித்த சில பாடசாலைகளின் ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புகளை நடத்துகின்றனர்.
தனியார் வகுப்புகளுக்கான கொடுப்பனவுகளை விட, தூர இடத்திலிருந்து வருகை தரும் மாணவர்களின் பிரயாணச் செலவையும் இங்கு பார்க்க வேண்டும். மிக மோசமான கல்விக் கொள்கைகள் காரணமாக அப்பாவி பெற்றோர்களுக்கு எத்தகைய சுமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம்.
தனியார் வகுப்புகளில் புரளும் பணம் இலங்கையின் முக்கியமான நிதி செயற்பாடாக இன்று விளங்குகின்றது. சில ஆசிரியர்கள் தமது பதவியை இராஜிநாமா செய்து விட்டு முழுநேர தொழிலாக தனியார் வகுப்புகளை நடத்துகின்றனர். ஒரு வகுப்பில் சராசரியாக 500 இலிருந்து 750 பேர் வரையான மாணவர்கள் கற்பது சாதாரண விடயமாக உள்ளது. உயர்தர மாணவர்களுக்கு மணித்தியால வகுப்புகளை வீடு தேடிச் சென்று நடத்துவது இப்போது புதிய பாணியாக உள்ளது. இதற்கு 2 ஆயிரத்திலிருந்து மூவாயிரம் வரை ஒரு மாணவரிடம் அறவிடப்படுகின்றது. மாதத்துக்கு எட்டு வகுப்புகள். ஐம்பது மாணவர்களுக்கு இவ்வாறு போதித்தால் அந்த ஆசிரியரின் மாத வருமானத்தை கணக்கிடலாம்.
பெற்றோர்கள் பிரத்தியேக வகுப்புகளுக்காக செலவிடும் பணத்தை மரங்களிலிருந்து பறிப்பதில்லை. இது அவர்களின் உழைப்பாகும். தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியறிவை பெற்றுத்தருவதற்கு அவர்கள் பாடுபடுகின்றனர். ஆனால் இலங்கையின் கல்விக் கொள்கைகள் அதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளன.
பிரபலமான பாடசாலைகளுக்கு மாத்திரமே சகல வளங்களும் ஒதுக்கப்படுகின்றன. பெற்றோர்களின் அந்தஸ்த்து, தொழில் மற்றும் வருமானத்தின் அடிப்படையிலேயே பிரபல பாடசாலைகளில் அவர்களின் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்கின்றன. அனைவருக்கும் சமமான கல்வி என்ற விடயம் இலங்கையைப்பொறுத்தவரை வாய் பேச்சளவிலேயே உள்ளது என்று தான் கூற வேண்டும்.