மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரம் என்றும் இல்லாதவாறு தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட அவர்களுக்கு என்ன நடந்தது? வடகிழக்கில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகள் விடுவிக்கப்படாமை , தமிழர்களின் உரிமை சார்ந்து நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டித்து மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்காவரை மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற உள்ளது.
இன் நிலையில் மறுபக்கம்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் நாளை மறுதினம் 04.02.2024 திகதி மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளருமாகிய எந்திரி என்.சிவலிங்கம் அவர்களின் வழி நடாத்தலில் மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடிப் பாலம் உள்ளிட்ட கல்லடி வரையிலான பிரதான வீதி உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு மின் குமிழ்களிலான அலங்கார வேலைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டில் சுதந்திரதினத்தன்று மாலை 6.30 மணிக்கு பழைய கல்லடி பாலத்தில் கடைத்தொகுதிகள் மற்றும் உணவுத் திருவிழா உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.