வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட பொலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தூண்டுவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற வெடுக்குநாறி மலை சம்பவத்திற்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
இலங்கை நாடானது பூர்வீக இந்து நாடாகும். இந்த பூர்வீக இந்து நாட்டிலே ஆட்சி புரிகின்ற பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் இந்து மதத்தை அடக்க முற்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
அண்மையிலே சிவராத்திரி தினத்தன்று வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு வழிபாடுகள் செய்யவும், பூசைகள் செய்யவும் சென்ற பொதுமக்கள் மீது நெடுங்கேணி பொலீசார் பாரிய தாக்குதலை நடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
குறிப்பாக குடிக்க தண்ணீர் கேட்டு அலறுகின்ற நிலை அங்கு சென்ற மக்கள் மத்தியில் காணப்பட்டது. ஏனென்றால் குடுப்பதற்கு தண்ணீர் எடுப்தற்கு கூட இடமளிக்காது பொலீசார் மிகவும் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டிருக்கின்றார்கள். மனிதநேய மற்றவர்கள் என்றுதான் அவர்களை கூறவேண்டிய நிலமை இருக்கின்றது.
ஆகவே இது சம்பந்தமாக இந்த நாட்டை ஆட்சி புரிகின்ற இந்த நாட்டின் தலைவராக இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இது குறித்து உணரவேண்டும்.
சில நாட்களுக்கு முன் அவர் சொன்னார் ஈழம் சிவ பூமி என்று , சிவ பூமியிலே மிக முக்கியமானது சிவராத்திரி விழா அந்த சிவராத்திரி விழாவையே எங்களது இந்து மக்கள் சுதந்திரமாகவே வழிபாடு செய்ய விடாது உங்களது பாதுகாப்பு தரப்பினர் தடுத்து வருகின்றனர்.
அவர்கள் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்.
நாங்கள் இது குறித்து சும்மா இருக்க மாட்டோம்.
இது சம்பந்தமாக சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம், ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ பகுதிக்கு கொண்டு செல்ல இருக்கின்றோம். இந்திய நாட்டின் பிரதமருக்கு இதுசம்பந்தமாக தெரியப்படுத்த உள்ளோம்.
விரைவிலே இந்திய தூதரகம் மூலம் இந்திய பிரதமருக்கான கடிதத்தை அனுப்ப உள்ளோம்.
இனியும் நாங்கள் பொறுமையாக இருக்க முடியாது இது எங்களது பூர்வீக நாடு, இந்த நாடு இந்து நாடு, இந்த நாட்டிலே எங்களது சுதந்திரத்தை தொல்பொருள் என்ற வகையிலும், பாதுகாப்பு படையினரின் இருப்பிடம் என்ற வகையிலும், பௌத்த பிக்குகளின் வாழ்விடம் என்ற வகையிலும், சிங்கள மக்களின் வாழிவிடம் என்ற வகையிலும் பறிப்பதை ஒருபோதும் நாம் அனுமதிக்க மாட்டோம்.
யுத்தத்தை காரணமாக வைத்து வடக்கு கிழக்கிலே தொல்பொருள் என்ற ரீதியிலே இந்து மக்களின் வாழ்விடங்கள், இந்து வழிபாட்டுத் தலங்கள், இந்துக்களின் பூர்வீக இடங்கள் எல்லாம் சுவிகரிக்கப்பட்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் இந்த வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோயில். அங்கு சிவன் ஆலயம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றது. ஆனால் அந்த ஆதாரங்களை கூட தொல்பொருள் திணைக்களம் கவனத்தில் எடுப்பதில்லை. காரணம் தொல்பொருள் திணைக்களத்திலே இருக்கின்ற 98 வீதமான அதிகாரிகள் சிங்களவர்களாக இருக்கின்றனர்.
பல தமிழ் பிராமி கல்வெட்டுகள் இன்னும் வாசிக்கப்படாமல் உள்ளது அதனை வாசித்தால் இந்த நாடு தமிழர்களின் நாடு என்று தெரிந்து விடும் என்பதால் தான் இன்னும் அதனை வாசிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
எங்களது வெடுக்குநாறி சிவன் ஆலயமும் பல நூற்றாண்டு காலத்திற்கு முற்பட்ட ஆலயம் அந்த ஆலயத்திற்கு தொல்பொருள் ரீதியான இந்துமதம் அடையாளங்கள் இருக்கின்றன.
ஆனால் அந்த இடத்தை பௌத்த பிக்குகளும், பாதுகாப்பு தரப்பினரும் அரசாங்கத்தின் ஆதரவோடு பௌத்த இடமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
அதற்காக பயன் படுத்தபட்ட விதமே நீதிமன்ற தீர்ப்பையும் மீறி செயற்பட்ட நெடுங்கேணி பொலீசாரின் காட்டுமிராண்டி தனமான செயற்பாடு.
இந்த பொலீசாரின் செயற்பாட்டிற்கு உடனடி நடவடிக்கை தேவை இல்லை என்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிகின்றோம்.
பகிரங்கமாக இந்து மக்கள் தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு தூண்டுவோம். என தெரிவித்தார்